காவிரி மேலாண்மை அமைக்கக்கோரி சரத்குமார் போராட்டம் – சீமான் கண்டனவுரை

298

காவிரி மேலாண்மை அமைக்கக்கோரியும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும் அகில இந்திய சமத்துவக் கட்சியின் சார்பில் 25-04-2018 அன்று சரத்குமார் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதற்கு ஆதரவு அளிக்கும் வகையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போராட்டத்தில் பங்கேற்று கண்டனவுரையாற்றினார்.

அதில் அவர் பேசியதாவது.

தேசியக் கட்சிகளான காங்கிரசும் பாஜகவும் இந்தியாவின் இறையாண்மையும், ஒருமைப்பாட்டையும் பேசுகிறது. பாஜக அதுக்கும் ஒருபடி மேல் சென்று ஒரே நாடு, ஒரே கட்சி, ஒரே சட்டம், ஒரே வரி என்கிறது.. ஆனால் கர்நாடகா என்று வரும்பொழுது காங்கிரசும் பாஜகவும் கர்நாடகாவின் மாநிலக்கட்சிகளாக கன்னடர்களின் கட்சிகளாக மாறிவிடுவிடுவதை நுட்பமாக கவனிக்கவேண்டும். இங்குள்ள காங்கிரஸ் கட்சி காவிரி மேலாண்மை வாரியம் வேண்டும் என்று போராடும், அங்கு ஆட்சியிலுள்ள காங்கிரஸ் கட்சி தமிழர்களுக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட தரமாட்டேன் என்று கூறும் ஆனால் இரண்டும் ஒரே கட்சிதான் ஒரே தலைமைதான். ராகுல் காந்தி கர்நாடக தேர்தல் பரப்புரையில் சொல்கிறார் மோடியையும், எடியூரப்பாவையும் நம்பாதீர்கள் அவர்கள் வெற்றிபெற்றால் தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் கொடுத்துவிடுவார்கள் என்கிறார்.

அதேபோல் மற்றொரு தேசியக் கட்சியான பா.ஜ.க-வின் தேசியத்தலைவர் முரளிதர ராவ் கர்நாடகாவிற்கு காவிரி பிரச்சினையில் எந்த ஒரு அச்சுறுத்தல் வந்தாலும் மத்திய அரசு பாதுகாப்பு அளிக்கும் என்று கூறுகிறார். எனவேதான் சொல்கிறோம் தேசியக் கட்சிகளை ஒருபோதும் தமிழ்நாட்டிற்கு அனுமதிக்கக்கூடாது. தமிழ்நாட்டிற்கு ஒரு சொட்டு தண்ணீர் இல்லை என்று எப்படி சொல்கிறார்களோ? அதேபோல் மானத்தமிழன் ஒருவனின் ஓட்டுகூட இவர்களுக்கு இல்லை என்று உறுதியேற்கவேண்டும்.

எத்தனை அவமதிப்பு? உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு சொல்கிறது காவிரி மேலாண்மை அமைத்தால் கர்நாடகாவில் கலவரம் வெடிக்கும் அதனால் வேண்டாம் என்று. அப்படியென்றால் நம்மையெல்லாம் உணர்வில்லாதவர்கள், போராடமாட்டர்கள் என்று அவன் முடிவுசெய்துவிட்டான். போராட்டத்தையும், புரட்சியையும் உலகத்திற்கு கற்றுக்கொடுத்த இனம், தமிழினம். கர்நாடகாவில் சட்ட ஒழுங்கு கெடும், போராட்டம் வெடிக்கும் என்றால் தமிழ்நாட்டில் இதெல்லாம் நடக்காதா? கர்நாடகாவில் உள்ள தமிழர்களை கருத்திற்கொண்டு பேசுங்கள்! என்று அறிவுறுத்துவது போல நம்மை பயமுறுத்துகிறார்கள். எத்தனையோ இலட்சம் உயிர்களை இழந்துவிட்டோம் எங்களைப்போல மானத்தையும், வீரத்தையும் உயிரென்று நினைத்து வாழ்ந்த இனம் இவ்வுலகில் கிடையாது. இங்குள்ள கன்னடம் பேசும் மக்களின் பாதுகாப்பு குறித்து அங்குள்ளவர்கள் யாரும் பேசமாட்டார்கள். ஏனென்றால் தமிழன் ஆகச்சிறந்த சனநாயகவாதி என்று அவர்களுக்கு தெரியும்.

கே.பி.என் பேருந்துகளை எரித்தார்கள் அதில் ஈடுபட்ட ஒருவர் மீது கூட முதல் தகவல் அறிக்கை (FIR) போடவில்லை. லாரி ஓட்டிவந்த முதியவர் ஒருவரை அடித்தார்கள். நம் தன்மானத்தின் மீது கை வைத்தார்கள். தமிழர்கள் அங்கிருந்து வாகனமில்லாமல் நடந்தே வந்தார்கள். ஆனால் இங்குள்ளவர்கள் யார் தமிழர்? என்று கேட்கிறார்கள். ஒவ்வொரு தமிழன் வீட்டிற்கும் சென்று அடிக்கிறானே கர்நாடகக்காரன் அவனுக்கு தெரிகிறது தமிழன் யார் என்று.

யார் வேண்டுமானாலும் ஆளலாம் என்பதை எப்படி ஏற்பது? என் தாயும் என் தாய் நிலமும் ஒன்றுதான், என் தகப்பன் என்பவன் என்னை பெற்றவனாக இருக்கவேண்டும். தலைவன் என்பவன் என் இனத்தவனாக இருக்க வேண்டும். என் மொழி புரியாதவன் எனக்கு இறைவனாக இருக்க முடியாது, என் வலி உணராதவன் எனக்கு தலைவனாக இருக்க முடியாது. இதுதான் எங்கள் கொள்கை முடிவு.

ரஜினிகாந்த் மட்டும் தான் நல்லவர் என்பது போல் பேசுகின்றனர். தமிழர்களின் துன்பத்திற்கும், துயரத்திற்கும், கண்ணீருக்கும் இறங்கி வராதவர் எப்படி நல்லவராக இருக்க முடியும். அவர் மட்டும் தான் நல்லவர் என்றால் தமிழகத்தில் உள்ள மற்ற அனைவரையும் கெட்டவர்கள் என்கிறீர்களா? இமயமலைக்கு சென்று ஸ்வட்டர் போட்டுக்கொள்ளட்டும், இங்கு டுவிட்டர் போடவேண்டாம். மக்கள் பிரச்சினைகளைப் பேசவே அஞ்சுகிறார்; ஆனால் முதலமைச்சராக வேண்டும் என்று கனவு காண்கிறார். நான் மக்கள் பிரச்சினைகளைப் பேசியதற்காகவே ஐந்து முறை சிறைக்கு சென்றவன்.

ஏன் ஐபிஎல் விளையாட்டுக்கு எதிராக போராடுகிறார்கள்? என்கிறார்கள். ஐபிஎல் விளையாட்டு அல்ல; அது ஒரு சூதாட்டம். ஆடுகளை சந்தையில் விற்பதுபோல் வீரர்களை விற்கிறார்கள். அந்த மைதானத்தைப் பராமரிக்க நாளொன்றுக்கு மூன்றரை லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. மக்களுக்கே தண்ணீர் இல்லாதபோது மைதானத்திற்கு தேவையா? எனக்கும் சரத்குமாருக்கும் மட்டும்தான் தாகம் எடுக்கும், பசிக்கும் என்று போராடுகிறோமா எங்களை எதிர்ப்பவர்களின் நீருக்கும் சோறுக்கும் சேர்த்துதான் போராடுகின்றோம்.

நீட் என்றால் நீதிமன்றம் போ, காவிரி என்றால் நீதிமன்றம் போ, சல்லிக்கட்டு என்றால் நீதிமன்றம் போ. அனைத்திற்கும் நீதிமன்றம் என்றால் சட்டமன்றம், பாராளுமன்றம் எதற்கு பல்லாங்குழி விளையாடுவதற்கா? நீதிமன்றம் சனநாயகமா, சட்டமன்றம், பாரளுமன்றம் சனநாயகமா? இறையாண்மை என்றால் என்ன இறை என்றால் அரசு, ஆண்மை என்றால் ஆளுமை. ஆளுமையான அரசு என்ன சொல்லியிருக்க வேண்டும் நீதிமன்றம் சொன்ன தீர்ப்பின் படி தண்ணீர் தமிழகத்துக்கு வேண்டும் என்று கூறியிருக்கவேண்டும். அதுதானே ஆண்மையுடைய அரசு.

பிரதமரை காணவில்லை “மோடி போய்விடுகிறார் ஓடி கொண்டுவாருங்கள் தேடி” என்பதுபோல் ஆகிவிட்டது. அவர் கொண்டு வரும் திட்டத்தில் இந்தியா உள்ளது ஆனால் அவர்தான் இந்தியாவில் இல்லை. கருப்பு பணத்தை கொண்டுவருவது இருக்கட்டும், எங்கள் பிரதமரை முதலில் இந்தியாவிற்கு கொண்டு வாருங்கள்.

கர்நாடகாவில் ஒரு தமிழன் மாமன்ற உறுப்பினர் தேர்தலில் நின்று வெற்றிபெற்றார் ஆனால் அவரை பதவி ஏற்கவிடவில்லை. எங்கு சென்றது சனநாயகம் ஏன் தொலைக்காட்சியில் இதற்கெல்லாம் விவாதம் செய்யவில்லை. சரி ஏன் சோனியாகாந்தியை பிரதமர் ஆக்கவில்லை ஏனென்றால் அவர் இந்தியாவிற்கு வெளிநாட்டவர் அதுமாதிரிதான் ரஜினியும் தமிழ்நாட்டிற்கு. அவருக்கு கச்சதீவு, கதிராமங்கலம், நெடுவாசல் இதெல்லாம் எங்குள்ளது தெரியுமா? தமிழில் உயிரெழுத்து, மெய்யெழுத்து எத்தனை உயிர்மெய்யெழுத்து எத்தனை என்று தெரியுமா? தெரியாதவர்கள் போய்விடுங்கள்.

காவிரிப் பிரச்சினைக்கு காரணம் யார் இந்த ஆட்சியாளர்கள்தான். ஆளும்கட்சி உண்ணாவிரதம் இருக்கின்றது என்ற பெயரில் பின்னால் பிரியாணி உண்கிறது. எதிர்க்கட்சி போராட்டம் நடத்தி கைது செய்து மண்டபத்தில் அடைத்தால் அங்கு மது குடிப்பேன் என்று காவல்துறையிடம் போராடுகிறார்கள். நாம் எந்தத் தண்ணிக்கு போராடச்சொன்னால், இவர்கள் எந்தத் தண்ணிக்கு போராடுறானுங்க?

காங்கிரஸ் போராடுது வாழ்த்துகள், தி.மு.க போராடுது வாழ்த்துகள் ஆனால் பத்தாண்டுகளாக ஆட்சியிலும், அதிகாரத்திலும் இருந்தீர்களே அப்போது வாயை திறக்கவில்லையே. இந்திய ஒன்றியத்திலேயே பதினேழு ஆண்டுகள் ஆட்சியிலும், அதிகாரத்திலும் இருந்த ஒரே கட்சி தி.மு.க ஆனால் காவிரி பிரச்சினைக்கு தீர்வு காணவில்லை. எங்க அப்பன் செத்துட்டான் என்று நான் அழுகிறேன். கொலை செய்தவனே நீதானே, நீ ஏன் அழுகிறாய்?

காங்கிரசும், தி.மு.கவும் மத்தியில் ஆட்சிக்கு வந்தால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும், ‘நீட்’ தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கப்படும் என்று சொல்லுங்கள் நாங்கள் உங்களை ஆதரிக்கிறோம். ஒன்று ‘நீட்’ தேர்விலிருந்து விலக்கு அளியுங்கள் இல்லை எங்களை விலக்கிவிடுங்கள்.

இவ்வாறு சீமான் பேசினார்.

முந்தைய செய்திஊதிய முரண்பாடுகளைக் களையக்கோரி இடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டம் – சீமான் நேரில் ஆதரவு
அடுத்த செய்திகாவிரி உரிமை மீட்புக்காக ஐபிஎல் போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் இருவர் விடுதலை