திருவள்ளூர் மாவட்டப் பொறுப்பாளர்கள் சந்திப்பு மற்றும் புதிய நிர்வாகிகள் நியமனம்

203

திருவள்ளூர் மாவட்டப் பொறுப்பாளர்கள் சந்திப்பு மற்றும் புதிய நிர்வாகிகள் நியமனம் | நாம் தமிழர் கட்சி

கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி முதல், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் மாவட்டவாரியாக அனைத்துநிலை பொறுப்பாளர்களையும் சந்தித்து கட்சியின் உட்கட்டமைப்பை முறைபடுத்திவருகிறார். எனவே தலைமைக்கு ஒத்துழைப்பு நல்கி அனைத்து மாவட்ட, தொகுதிப் பொறுப்பாளர்கள் தங்களது மாவட்டத்திற்குட்பட்ட தொகுதி, மாநகர, நகர, பேரூராட்சி, ஒன்றியம், ஊராட்சி, வட்டம், கிளை குறித்த விவரங்கள் அடங்கிய தொகுதி உட்கட்டமைப்புப் பட்டியலை விரைந்து தலைமை அலுவலகத்திற்கு அஞ்சல் மூலமோ நேரடியாகவோ அல்லது (ravanankudil@gmail.com) மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பிவைக்கும்படி கடந்த 30-01-2018 சுற்றறிக்கை வெளியிடப்பட்டது. முதற்கட்டமாக காஞ்சிபுரம், சென்னை மாவட்டங்களுக்கான கலந்தாய்வு வெற்றிகரமாக நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து இன்று 12-08-2018 (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிமுதல் மாலை 03 மணிவரை திருவள்ளூர் மாவட்டத்திற்குட்பட்ட திருவள்ளூர், திருத்தணி, பூந்தமல்லி, மதுரவாயல், ஆவடி மற்றும் அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதிகளுக்கான நாம் தமிழர் கட்சியின் அனைத்துநிலை பொறுப்பாளர்களுடன் சீமான் அவர்கள் கலந்துரையாடி புதிய நிர்வாகிகளை நியமனம் செய்வித்தார. இச்சந்திப்பு அம்பத்தூர், BSV திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாநில ஒருங்கிணைப்பாளர்கள் அம்பத்தூர் அன்புத்தென்னரசன் மற்றும் விருகைஇராஜேந்திரன், தலைமை நிலையச் செயலாளர் திருவள்ளூர்செந்தில்குமார், மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் மகேந்திரன், மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் அமுதா நம்பி ஆகியோர் உடனிருந்தனர்.

இச்சந்திப்பு அம்பத்தூர், BSV திருமண மண்டபத்தில் நடைபெற்றது. முன்னதாக செய்தியாளர்களிடம் சீமான் பேசுகையில் கூறியதாவது,

பாரத ரத்னா

பாரத ரத்னாவை நாங்கள் ஒருபோதும் விருதாக ஏற்பதில்லை. விடுதலைப்போராட்டத்தில் பங்கேற்று நாட்டிற்காகச் செக்கிழுத்த எங்கள் பாட்டன் வ.உ.சி.க்கு அளிக்காத விருதை, விளையாட்டு வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு அளித்தார்கள். அதனால், அவ்விருதை நாங்கள் உயரிய விருதாக ஒருபோதும் பார்க்கவில்லை.

திருவாரூர் இடைத்தேர்தல்

திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூர் இடைத்தேர்தல்களில் நாம் தமிழர் கட்சி போட்டியிடுகிறது. எங்கள் தத்துவம் தனித்துவமானது. அதனால், நாங்கள் எப்போதும் தனித்துதான் போட்டியிடுவோம். எங்கள் தத்துவத்தையும், கொள்கையையும் ஏற்று எங்களோடு இணைய வந்தால் எவரையும் இணைத்துக் கொள்வோம். திராவிடக் கட்சிகள், இந்தியத் தேசியக் கட்சிகளோடு இணைவது சாத்தியமில்லை.

டி.வி.எஸ். வேணுசீனிவாசன் முன்பிணை

டி.வி.எஸ். நிறுவன உரிமையாளர் வேணுசீனிவாசன் குற்றமற்றவரென்றால் அவராக முன்வந்து முன்பிணை பெறவேண்டியத் தேவையென்ன வந்தது? நாங்களெல்லாம் முன்பிணை பெற்றிருக்கிறோமென்றால் எங்கள் மீது போராட்ட வழக்கிருக்கிறது என்பதால்தான். கோயில்களில் சிலைக்கடத்தல் கோயில்களிலுள்ள குருக்களுக்குத் தெரியாமல் நிகழுமா? எத்தனையோ வழக்குகளுக்கு மத்தியப் புலனாய்வு விசாரணை கோரியபோது விசாரணையை மாற்றித் தர மறுத்து தமிழகக் காவல்துறையின் விசாரணையே போதும் என்று தமிழக அரசு கூறியிருக்கிறது. இவ்விவகாரத்தில் காவல்துறையின் மீது நம்பிக்கையற்று மத்தியப் புலனாய்வு விசாரணை கோருவதை எவ்வாறு ஏற்பது? முதல்வருக்கே தனது துறையின் மீது நம்பிக்கையில்லையென்றால் மக்களுக்கு எப்படி நம்பிக்கை வரும்.? பலரைத் தப்பிக்க வைப்பதற்காகத்தான் விசாரணையைத் தமிழக அரசு மாற்ற முனைந்தது. பொன் மாணிக்கவேல் விசாரணை பலருக்குக் கலக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாலேயே அவரை மாற்றத் துடிக்கிறார்கள். அவர் நேர்மையாக இருப்பதுதான் ஆட்சியாளர்களுக்குச் சிக்கலாக இருக்கிறது. ஐயா சகாயத்திற்கு என்ன நிகழ்ந்ததோ அதேதான் பொன்.மாணிக்கவேலுக்கும் நிகழுகிறது.

திருமுருகன் காந்தி கைது:

திருமுருகன் காந்தி என்ன தேசத்துரோகச் செயலில் ஈடுபட்டாரென வழக்குத் தொடுக்கிறார்கள்.? ஒரு அரசுக்கு எதிராகப் பேசுவதே தேசத் துரோகமென்றால் அது அரசா? அரசு என்னவேண்டுமானால் செய்யலாம். மக்கள் அதற்கு எந்த எதிர்வினையுமாற்றக் கூடாது என்பதை எப்படி ஏற்பது? சேலத்தில் மக்கள் முன்னிலையில் என்னைக் கைதுசெய்தார்கள் என்றால் அதன்மூலம் மக்களை மறைமுகமாக அச்சுறுத்த நினைக்கிறார்கள். இந்த அடக்குமுறைகளுக்கெல்லாம் அஞ்சாத ஒரு தலைமுறை உருவாகிவிட்டது. அதனால், இதனையெல்லாம் அரசு கைவிட வேண்டும்.

 

முந்தைய செய்திகொச்சியில் விசைப்படகு மீது கப்பல் மோதிய விபத்தில் காணாமல் போன 9 மீனவர்களையும் உடனடியாக மீட்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திதிருவள்ளூர் மாவட்டப் பொறுப்பாளர்கள் சந்திப்பு மற்றும் புதிய நிர்வாகிகள் நியமனம் – செங்குன்றம்