வேளாண்மையை மாநிலப்பட்டியலிலிருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றுவது வேளாண்மையை அழிக்க முனையும் கொடுஞ்செயல்! – சீமான் கண்டனம்

73

வேளாண்மையை மாநிலப்பட்டியலிலிருந்து பறித்துப் பொதுப்பட்டியலுக்கு மாற்றுவது இந்திய வேளாண்மையை அழிக்க முனையும் கொடுஞ்செயல் : சீமான் கண்டனம்!

வேளாண்மையை மத்திய அல்லது பொதுப்பட்டியலுக்குக் கொண்டுவர வேண்டும் என்கிற நிதி ஆயக்கின் பரிந்துரை குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

நாடு விடுதலைபெற்ற பிறகு மாநிலங்களுக்கிடையே நிதிஒதுக்குவது தொடர்பான பணிகளுக்காக அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களால் அமைக்கப்பட்ட மத்திய திட்டக்குழுவைக் கலைத்துவிட்டு, ‘நிதி ஆயக்’ எனும் புதிய அமைப்பை கடந்த 2015ஆம் ஆண்டு உருவாக்கினார் பாரதப்பிரதமர் நரேந்திர மோடி. பிரதமரைத் தலைவராகக் கொண்ட இவ்வமைப்பில் துணைத்தலைவரையும், உறுப்பினர்களையும் குழுவின் தலைவரே நியமனம் செய்யும்வகையில் அதிகாரம் வகுக்கப்பட்டுள்ளதால் மத்திய அரசின் எண்ணவோட்டத்தைப் பிரதிபலிப்பவர்களே அவற்றில் அங்கம் வகிப்பார்கள் என்பது வெளிப்படையாகிறது. ஆகையினால், மத்திய அரசு தான் செயல்படுத்த நினைக்கும் தனியார்மயமாக்கலை இக்குழு வாயிலாகச் செயல்படுத்த முனைகிறது என்பது மறுக்கவியலா உண்மையாகும். அரசுப்பள்ளிகளைத் தனியாரின்வசம் ஒப்படைக்க வேண்டும் என்கிற பரிந்துரையை அண்மையில் முன்வைத்த இக்குழு, தற்போது அதன் நீட்சியாக வேளாண்மையை மத்தியப்பட்டியலிலோ, பொதுப்பட்டியலிலோ சேர்க்க வேண்டும் என்கிற பரிந்துரையையும் அளித்திருக்கிறது.

தன்னை ஒரு இந்துத்தேசியவாதியெனப் பெருமையோடு பிரகடனம் செய்துகொள்ளும் பாரதப்பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்குத் தனது கனவான ஏக இந்தியாவைப் படைப்பதற்கு மாநிலங்களின் தன்னாட்சி உரிமையை முழுமையாய் பறித்து அதிகாரக்குவிப்பில் ஈடுபடுவது அவசியப்படுவதால் இந்தியாவின் பன்முகத்தன்மையைக் குலைக்கிற வேலையில் ஈடுபடுகிறார். ஏற்கனவே, கொண்டு வரப்பட்ட ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்புமுறை மூலம் மாநிலங்களின் பொருளியல் உரிமை அபகரிக்கப்பட்டுவிட்டதால் தற்போது மத்திய அரசைச் சார்ந்திருக்கிற நிலைக்கு மாநிலங்களைத் தள்ளியிருக்கிறார். மறைந்த முன்னாள் பிரதமர் அம்மையார் இந்திரா காந்தி ஆட்சிக்காலத்திலேயே கல்வியும், மருத்துவமும் பொதுப்பட்டியலுக்குக் கொண்டு செல்லப்பட்டுவிட்டதால் மாநிலங்களுக்கு ஏற்படும் உரிமை இழப்புகளையும், அதிகாரமற்ற அடிமை நிலையினையும் இன்றைக்கு இருக்கிற நீட் தேர்வு வரை மாநிலங்கள் எதிர்கொண்டு வருகின்றன. அதனால், கல்வியையும், மருத்துவத்தையும் மாநிலப்பட்டியலுக்கே மீளப்பெறுவதற்காகப் போராடிக் கொண்டிருக்கிற இவ்வேளையில் தற்போது வேளாண்மையையும் மத்திய பட்டியலுக்குக் கொண்டு செல்ல நிதி ஆயோக் பரிந்துரை செய்திருப்பது பெரும் அதிர்ச்சியினை நாட்டு மக்களுக்கு அளித்திருக்கிறது. கூட்டாட்சித் தத்துவத்தை முழுமையாக ஏற்றுக்கொண்ட இந்திய நாட்டில் அதிகாரப்பரவல் நீக்கமற நிகழும்போதுதான் உண்மையிலேயே இந்நாடு சனநாயக நாடாகத் திகழ முடியும் என்பதை நாம் தமிழர் கட்சி முழுமையாக நம்புகிறது. ஆகவே, நிதி ஆயக் குழுவின் இவ்வகைப் பரிந்துரையானது இந்தியாவின் கூட்டாட்சித் தத்துவத்திற்கும், அரசியமைப்பு சாசனத்திற்கும் முற்றிலும் எதிரானது என அறுதியிட்டுக் கூறுகிறேன்.

வேளாண்மையை மத்திய அல்லது பொதுப்பட்டியலுக்குக் கொண்டுசெல்ல நிதி ஆயோக் அமைப்பு கூறியிருக்கிற காரணமானது விந்தையாகவும், வேடிக்கையாகவும் இருக்கிறது. மாநிலங்களுக்கிடையே கடிதங்களைக் கொண்டுசெல்லும் அஞ்சலகங்கள் மத்தியப்பட்டியலில் இருப்பதாலும், வேளாண் பொருட்களை ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்திற்குக் கொண்டு செல்ல வேண்டியிருப்பதாலும் வேளாண்மையை மத்திய பட்டியலுக்கோ அல்லது பொதுப்பட்டியலுக்கோ கொண்டு செல்ல வேண்டியிருப்பதாக விளக்கமளித்திருக்கிறார் நிதி ஆயக்கைச் சேர்ந்த இரமேஷ் சந்த்.

விவசாயிகளின் நலனுக்கெதிரான நிலைப்பாட்டையே எப்போது எடுத்து வரும் மத்திய அரசானது வேளாண்மையைப் பொதுப்பட்டியலுக்கோ, மத்தியப்பட்டியலுக்கோ கொண்டு சென்றால் அது விவசாயத்தில் மாநிலத்தின் உரிமைகளை முழுமையாகப் பறிக்கிற படுபாதகமாய் முடியும் என்பது கண்கூடாகும். காங்கிரஸ் ஆட்சியில் எம்.எஸ்.சுவாமிநாதன் தலைமையில் அமைக்கப்பட்ட தேசிய விவசாய ஆணையத்தின் பரிந்துரைகளை முன்வைத்து, விவசாயப்பொருட்களுக்குக் குறைந்தபட்ச ஆதாரவிலையை (MSP) உறுதிப்படுத்துவோம் என்றும், விவசாயிகளின் இலாபத்தை இரட்டிப்பு மடங்காக்குவோம் என்று பாராளுமன்றத் தேர்தலில் வாக்குறுதி அளித்த மத்திய அரசானது அவற்றையெல்லாம் காற்றில் பறக்கவிட்டுவிட்டு, அவ்வாணையத்தின் பரிந்துரைகளை நிறைவேற்றுவது சாத்தியமில்லை என்று கைவிரித்ததை நாடறியும். இந்தியத் தலைநகர் டெல்லியில் 100 நாட்களுக்கு மேலாகப் பனியிலும், மழையிலும், வெயிலிலும் கிடந்து தமிழக விவசாயிகள் போராடியபோது, அவர்களின் போராட்டத்தினை ஏறெடுத்துக்கூடப் பார்க்காத மத்திய அரசு விவசாயிகளின் நலன்களுக்காகத்தான் வேளாண்மையைத் தங்களது அதிகார வரம்புக்குள் வைத்துக்கொள்கிறது என்பது வேடிக்கையானது.

பாஜக ஆளும் மத்தியப்பிரதேச மாநிலத்தில் மான்ட்சர் மாவட்டத்தில் நடைபெற்ற விவசாயிகளின் போராட்டத்தில் 5 விவசாயிகள் அம்மாநிலக் காவல்துறையினரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டபோது கைகட்டி வேடிக்கைப் பார்த்த மோடி அரசு இப்போது விவசாயிகளின் நலன்களுக்காகத்தான் வேளாண்மையைப் பட்டியல் மாற்றம் செய்கிறதா? மரபணு மாற்றப்பயிர்களை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் எனத் தேர்தலில் வாக்குறுதி அளித்துவிட்டு, தற்போது கடுகு உள்ளிட்ட மரபணு மாற்றப்பயிர்களுக்குக் கடைவிரித்துப் பன்னாட்டு நிறுவனங்களுக்கு வாசல்திறக்கிற பாஜக அரசா விவசாயிகளுக்காக நிற்கப் போகிறது? மான்சாண்டோ நிறுவனம் அளித்த மரபணு மாற்றம்செய்யப்பட்ட பருத்தியால் நாடு முழுக்க நிகழ்ந்த விவசாயத் தற்கொலைகள் தெரிந்தும் மரபணு மாற்ற ஆய்வுக்கு அனுமதி அளிக்க முனைகிற இவர்களா விவசாயிகளின் நலன்களுக்கு ஆதரவாய் செயல்படுவார்கள்? விவசாயிகளின் நண்பனாகத் தன்னைச் சித்தரித்து அதிகாரத்திற்கு வந்துவிட்டு விவசாய நிலங்களைக் கையகப்படுத்த நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை அவசரச்சட்டமாக நான்கு முறை கொண்டு வந்தவர்களா வேளாண்மையை வளர்த்தெடுக்கப் போகிறார்கள் என்று எழும் அடிப்படைக் கேள்விகளே பாஜகவின் விவசாயிகளுக்கு எதிரான மனநிலையைப் படம்பிடித்துக் காட்டும். ஆகவே, வேளாண்மையை மத்திய பட்டியலுக்கு எடுத்துச் செல்ல முனையும் நிதி ஆயோக்கின் பரிந்துரையானது தேவையற்றது; வேளாண்மையைத் தனியார் முதலாளிகளின் வேட்டைக்காடாக மாற்ற முனையும் கொடுஞ்செயல்.

விவசாயப்பொருட்களுக்கான விலையை நிர்ணயம் செய்யும் அதிகாரத்தைக் கையில் வைத்துக்கொண்டு அதனை உயர்த்த மறுக்கிற மத்திய அரசு, வேளாண்மையைப் பொது அல்லது மத்திய பட்டியலுக்குள் கொண்டுசென்ற பிறகு அதனைச் செய்யும் என்பது ஏமாற்று மொழியாகும். ஆண்டுதோறும் பல்லாயிரம் கோடி ரூபாய் வாராக்கடன்களைத் தள்ளுபடி செய்துவிட்டு, விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்கிற பேச்சுக்கே இடமில்லை என்று அறிவிக்கிற பாஜக அரசானது, மத்தியப்பட்டியலில் வேளாண்மையைக் கொண்டுபோவது விவசாயிகளின் நலனுக்கானது என்பது மடமைத்தனமாகும். ஆகவே, நிதி ஆயோக்கின் இப்பரிந்துரைக்கு எதிராகத் தமிழக அரசானது போர்க்குரல் எழுப்ப வேண்டும் எனவும், இந்திய வேளாண்மையைப் பாதுகாக்க அப்பரிந்துரைகளை மத்திய அரசானது நிராகரிக்க வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

முந்தைய செய்திகந்துவட்டிக் கொடுமையால் 4 பேர் தீக்குளிப்பு: காரணமானவர்கள் மேல் உடனடியாகக் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்! – சீமான் கோரிக்கை
அடுத்த செய்திகொடியேற்றம், மரக்கன்று வழங்கல் மற்றும் டெங்கு விழிப்புணர்வு முகாம் | கீழ்பென்னாத்தூர் தொகுதி